Tuesday, March 24, 2009

தன்னம்பிக்கை சகோதரிகள்

தசைச்சிதைவு நோயின் கொடுமையான கோரப்பிடியில் சிக்குண்டு ஒரே குடும்பத்தில் அக்காவான வானவன் மாதேவி, தங்கையான இயல் இசை வல்லபியும் பாதிப்படைந்தது காணச் சகியாத அவலம்.

உடலின் இயக்கு தசைகளான கை, கால்கள் போன்றவற்றில் தசைச்செல்கள் கொஞ்ச கொஞ்சமாய் நசிவடைந்து, நடமாட்டம் தொய்வுற்று, செயல்பாடுகள் தொலைந்து போய், விரல்கள் மட்டுமே செயல்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சகோதரிகள். அப்படிப்பட்ட வேதனைச் சூழலிலும் கூட, வெறுமனே நட்களை நகர்த்தி மரணத்தை முத்தமிடத்தோன்றாமல் வாழ்ந்து பார்க்கவும், தங்களின் எஞ்சிய நாட்களை பயனுள்ளதாக மாற்றவும் மேற்கொண்ட‌ முனைப்பு அவர்களை சேவையமைப்பு ஒன்றினை துவக்கிட தூண்டியிருக்கிறது.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுபவர்களை அரவணைத்து நல்வழிகாட்டும் எண்ணத்தோடு இவர்கள் தங்களின் சொந்த ஊரான சேலத்தில் துவக்கியுள்ள அமைப்பை வழிகாட்டி நடத்திட, நெல்லை மாவட்டத்தின் மிகப்பெரிய ஊனமுற்றோர் மறுவாழ்வு கேந்திரமாகத் திகழும் அம்ர்சேவா சங்கத்தின் தலைவரான ஐயா ராமகிருஷ்ணன் அவர்கள் ஒப்புக்கொண்டிருப்பது இச்சகோதரிகளின் சமூகச்செயல்பாட்டின் மீதான நல்ல நம்பிக்கையை வளர்க்கிறது.

தோல்விகளைக் கண்டாலே துவண்டு போகும் மனிதர்களுக்கு மத்தியில், மரணத்தின் வாயிற்படியில் நிற்கும்போதும் தங்கள் நிலைகண்டு மயங்காமல், சமூகத்தின் நிலைக்காக சிந்தித்து, நல்ல தோழமைகளின் துணையுடன் சேவைச் செயலாற்ற முனையும் இந்த தன்னம்பிக்கைச் சகோதரிகளை எண்ணும்போது உண்மையிலேயே பெருமிதமாயிருக்கிறது.

1 comment: