Tuesday, March 24, 2009


வளரும் எழுத்தாளர் சாந்தி ராபர்ட்ஸ்

உதகமண்டலத்தைச் சேர்ந்த சாந்தி ராபர்ட்ஸ். இளவயதிலேயே ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு தொடர்பான நோயால் பாதிப்படைந்தார். இவருக்கு வாய்த்த அற்புதமான உறவுகளும், தோழமைகளும் இவரை சிகிச்சைகளுக்காக பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்றும், பலப்பல அறுவை சிகிச்சைகள் செய்தும் இவரைக் காத்தன.

கல்வியில் மீதான ஆர்வம் இவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் செல்ல, நிறுவனத்தில் கிடைத்த வேலைவாய்ப்பும் வாழ்வின் மீதான பிடிமானத்தை அழுத்தமாக்கியது. விளைவாய் தன்னுடைய ஓய்வு நேரங்களை சமூகத்துக்குப் பயனுள்ளதாக்கும் முயற்சிகளில் ஈடுபடலானார். ஒரு கட்டத்தில் பணிபுரிந்த நிறுவனத்தின் ஆட்குறைப்பு கொள்கையால் பாதிப்புற்ற போதிலும் கர்த்தரின் துணையோடு கலக்கங்களைக் கடந்தார்.

இயல்பிலேயே ஊற்றெடுத்த எழுத்தார்வத்தின் துணையோடு சமூக சங்கடங்களுக்காக குரல் கொடுக்க முனைந்தபோது அரசுப்பொறுப்புகளின் தட்டிக்கழித்தல்கள் சங்கடங்களித்தன. எனினும், பொதுமக்களின் நலன் கருதி தன் முயற்சியை கைவிடாமலிருக்கிறார். இவரின் தொடர்முயற்சிகளால், நடைபெற்ற நல்லவைகளின் எண்ணிக்கை கூடியபோதுதான் தன் எழுத்தின்மீது இவருக்கு நம்பிக்கை பிறந்தது என்று சொல்லலாம்.

இன்று பல்வேறு சிற்றிதழ்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் கதை, கட்டுரை, கவிதை என வலம்வரும் இவரின் எழுத்துக்களில் வாழ்க்கைப்பாதையில் தொலைதூர வெளிச்சப்புள்ளிகள் தென்படுகின்றன.

No comments:

Post a Comment